15, நாம் உலகத்தில் அக்கினியைக் கொளுத்தும் படி அல்லவோ வந்தோம்!

"நாம் உலகத்தில் அக்கினியைக் கொளுத்தும் படி அல்லவோ வந்தோம்." (அர்ச். லூக்கா : 12-49) "மனிதர் இருதயத்தில் தேவ சிநேக அக்கினிச் சுவாலையை மூட்டத் தேவநற்கருணையைவிட உலகத்தில் வேறோன்றுமில்லை" என்று மகாத்துமாவான பிராஞ்சிஸ்கு ஒலிம்பியோ என்பவர் வசனித்திருக்கிறார். சேசுநாதர் சிநேக அக்கினிச்சூளையின் நடுவில் நிற்கிறதாகவும், அந்த சூளையிலிருந்து அநேகமாயிரம் அக்கினிச் சுவாலைகள் உலகெங்கும் பரவுகிறதாகவும், ஒரு நாள் அர்ச்சியசிஷ்ட சியேன் நகர் கத்தரீனம்மாள் தரிசனத்தில் கண்டதினால் மனிதர்பேரில் இத்தனைச் சிநேகம் நிறைந்த தேவனை மனிதர் எல்லோரும் சிநேகித்து அந்தச் சிநேக அக்கினியால் தகனமாக வேண்டி யிருக்கையில், அவரை நேசிக்காமலிருக்கிறது எப்படியென்று மிகவும் ஆச்சரியப்படுவாள்.

செபம்

சேசுவே! நான் உமது சிநேக அக்கினிமயமாய்ப் பற்றி எரியவும், உம்மையே நாடி, உம்மையே ஆசித்து, உம்மையே தேடவும் கிருபை செய்யும். நான் முழுதும் தேவசிநேக அக்கினி மயமாய்ப் பற்றி எரிந்து, என் ஆயுசு குறையக் குறைய உலகத்தின் பேரில் எனக்குள்ள பற்றுதலும் தகனமானால் அல்லோ தாவிளை. என்பேரில் வைத்த சிநேக மிகுதியால் தேவநற்கருணையில் எனக்காகப் பலியாய், இலயமாய், வெறுமையாய்ப் போகத்திருவுள மான என் தயாபர சேசுவே! நான் உம்மைப்பற்றி உமக்காகவே என்னை முழுதும் பலியாக ஒப்புக்கொடுக்கிறது நியாய நீதிக்கு ஒத்திருக்கிறது என்கிறதினால், என் ஆண்டவரான இரட்சகரே. என் சிந்தனை, வாக்கு, கிரியை, என் ஆத்தும சரீர முழுதும் தேவரீருக்குப் பலியாக ஒப்புக்கொடுக்கிறேன். நித்திய பிதாவே! நீசனான அடியேன் ஒப்புக்கொடுக்கும் இந்த அற்பப் பலியை முன்னால் உமது ஏக சுதன் சிலுவை மரத்தில் ஒப்புக்கொடுத்த மாசற்ற பலியோடும், தினந்தோறும் எப்போதும் பீடத்தில் ஒப்புக்கொடுக்கும் திருப்பலி யோடும் ஒன்றாகக் கூட்டித் தேவரீருக்குப் பாதகாணிக்கையாக வைக்கிறேன். தயாபர சுரூபியான பிதாவாகிய சர்வேசுரா, உமது நேசமுள்ள திருக்குமாரனுடைய திரு முகத்தைப் பார்த்து, அடியேன் ஒப்புக்கொடுக்கும் பலியை தேவரீர் கையேற்று, என் ஆயுசுபரியந்தம் நான் உமக்கு இந்தப் பலியைத் தப்பாமல் கொடுக்க கிருபை செய்தருளும். ஆண்டவரே, அநேகமாயிரம் பேர் உமது சிநேகத்தைப் பற்றி உமக்காகத் தங்கள் பிராணனைத் தந்து வேதசாட்சிகளானார்போல, நானும் உமது சிநேகத்தைப் பற்றி உயிரை இழந்து வேதசாட்சியாக மரிக்க ஆசைப்படுகிறேன். இத்தனை விசேஷ தயைக்கு அடியேன் பாத்திரவானல்ல வென்கிறதினால், தேவரீர் அடியேனுக்கு எவ்வகை மரணம் கட்டளையிட்டாலும் அதை நல்ல மனதோடு கைக்கொண்டு, என் உயிரைத் தேவரீருக்கு பலியாக முழு மனதோடு ஒப்புக்கொடுக்கக் கிருபை செய்தருளும். உமது தோத்திரத்திற்காக உமக்குப் பிரியப்படவும், எந்தெந்த அந்தஸ்தில் எப்படி மரிக்க வேண்டுமென்று திருவுளமாயிருக்கிறீரோ, அப்படியே நானும் மரிக்கவும் ஆசைப்பட்டு மன்றாடுகிறதுமல்லாமல், அக்காலத்திலும் எவ்விதமாய் என் ஆவி பிரிய வேண்டுமென்று திருவுளமாயிருக் கிறீரோ, அக்காலத்தில் அவ்விதமாய் என் ஆவியைப் பிரிக்க இப்பொழுதுதானே தேவரீருடைய பாதங்களில் வைத்துவிடுகிறேன். 

மனவல்லயச் செபம்: 

ஆண்டவரே, நான் உமக்குப் பிரியப்பட விரும்புகிறேன். உமக்குத் துரோகம் செய்கிறதைவிட மரிக்க விரும்புகிறேன்.

தேவ நற்கருணையின் சந்நிதியில் வேண்டுதல்:

நிகரில்லாத பரம அன்பின் மிகுதியினாலே தேவ நற்கருணையில் எழுந்தருளி எங்கள் பீடங்களின் மேல் நிலையாயிருக்கத் தயை புரிந்த மதுர சேசுவே! அன்புக்குரிய இரட்சகரே! தேவரீர் பரம கர்த்தரென்றும், சர்வத்திற்கும் அதிபதியான கடவுளாகிய என் தெய்வமென்றும் விசுவசித்து நம்பி, இதிலே உம்மை மிகுந்த தாழ்ச்சி வணக்கத்தோடு ஆராதிக்கிறேன். பரம திவ்விய நற்கருணையிலிருக்கிற உமக்குப் பாவிகள் செய்கிற துரோகங்களைத் தேவரீர் பாராட்டாமல், தேவரீர் அடியோர்கள் பேரில் காண்பிக்கிற மட்டில்லாத பட்சத்தைப்பற்றி முழு மனதோடு உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறேன். எங்கள் நன்றிக் கெட்டதனத்தின் பேரில் மிகுந்த விசனப்பட்ட அநந்த மகிமை யுள்ள பரம தேவனே, ஆராதனைக்குரிய இந்தத் தேவதிரவிய அனுமானத்திலிருக்கிற உமக்குச் செய்யப்பட்டதும், இனிச் செய்யப்படுவதுமாகிய துரோகங்களுக்கும், அவமானங்களுக்கும், நிந்தைகளுக்கும் பரிகாரமாக என்னால் இயன்ற மட்டும் பக்தி வணக்கத்தோடும், என் இருதயத்திலுள்ள முழுப் பட்சத்தோடும் உமக்கு நமஸ்காரம் செய்ய வருகிறேன். ஆ என் திவ்விய கர்த்தாவே! முன்னால் நானே அநேகம்முறை உம்முடைய சந்நிதியில் வணக்கக் குறைவாய் நடந்ததற்கும், தேவபக்தி, சிநேகமில்லாமல் அசட்டையாய் உம்மை பெற்றுக் கொண்டதற்கும் அடியேன் படுகிற மிகுதியான வியாகுலத்தைத் தேவரீருக்கு எவ்விதமாய்ச் சொல்லப் போகிறேன். 

தயவுள்ள கர்த்தாவே! அடியோர்களுடைய பாவத் துரோகங்களைப் பொறுத்து, உம்முடைய அளவில்லாத கிருபையை மாத்திரம் நினைத்தருளும் சுவாமீ. தேவரீருடைய மட்டற்ற அன்பு விளங்குகிற இந்தத் தேவத்திரவிய அநுமானத்தில் உம்மை வணங்கவும் எல்லோருடைய வணக்கத்தையும் உமக்கு வருவிக்கவும் எனக்குள்ள பெரும் ஆசையை ஏற்றுக் கொள்ளும் சுவாமீ. மெய்யாகவே சம்மனசுகளும் அர்ச்சியசிஷ்டவர்களும் இதிலே உம்மைச் சிநேகித்து ஸ்துதித்து ஆராதிக்கிறது போல, நானும் என் முழு மனதோடு உம்மை நேசித்து, தோத்தரித்து, வந்தித்து, வணங்க ஆசிக்கிறேன். மேலும், நான் சாஷ்டாங்கமாக விழுந்து ஆராதிக்கிற உமது இந்த திருச் சரீரத்தையும், விலைமதியாத இரத்தத்தையும் பற்றி, நான் இனி தேவ - நற்கருணையில் உம்மைப் பயபக்தி வணக்கத்தோடு நமஸ்கரிக்கிறதினாலும், அதைத் தகுந்த ஆயத்தத்தோடு பெற்றுக்கொள்கிற தினாலும் உம்முடைய கிருபையை அடைந்து, எம் மரணத்திற்குப் பின்பு சகல மோட்சவாசிகளோடு கூடப் பேரின்பப் பாக்கியத்தில் நித்தியமாய் உம்மைத் தரிசித்து ஸ்துதிக்கிறதற்குப் பாத்திர வானாகும்படியாக எனக்கு அனுக்கிரகம் செய்தருளும் சுவாமீ, ஆமென்.

சர்வேசுரா சுவாமீ, உம்முடைய திவ்விய குமாரனுமாய் எங்கள் பரம குருவுமாயிருக்கிற சேசுநாதர் அடியோர்கள் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக, உமக்குச் செலுத்துகிற பரிசுத்த பலியை உம்முடைய தேவாலயத்திலும் தேவரீர் பரமண்டலங்களில் வீற்றிருக்கிற உந்நத ஸ்தலத்திலும் பார்த்து எங்கள் எண்ணிறந்த அக்கிரமங்களைப் பொறுத்தருளும் சுவாமீ. சிலுவையிலிருந்து எங்கள் திவ்விய இரட்சகரும் மனுஷாவதாரத்தால் எங்கள் சகோதரருமாகிய சேசுவினுடைய திரு இரத்தத்தின் குரல் உம்மை நோக்கி கூப்பிடுகின்றது. எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமீ. தேவரீர் உம்முடைய கோபத்தினை அமர்த்தியருளும். எங்கள் மேல் உம்முடைய கிருபாகடாக்ஷம் வைத்து நன்மை புரியும். என் கர்த்தாவே, அதிக தாமதம் செய்யாதேயும். இவ்வூரின் மேலும் இச்சனத்தின் மேலும் தேவரீர் தயவாயிருக்கும்படிக்கு, உம்முடைய திரு நாமம் பிரார்த்திக்கப்பட்டபடியினாலே உமக்குத் தோத்திர மாகத்தானே எங்களுக்குக் கிருபை செய்தருளும், ஆமென்.

பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு எந்நேரமும் ஆராதனையும், ஸ்துதியும் தோத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக்கடவது. (இப்படி மும்முறை சொல்லவும்.)

நிந்தை பரிகாரச் செபம்:

எங்கள் திவ்விய இரட்சகராகிய சேசுகிறீஸ்துவின் திரு இருதயமே! நாங்கள் மிகவும் நீசப்பாவிகளாயிருந்தாலும் உம்முடைய தயையை நம்பிக்கொண்டு, உமது சந்நிதியில் பயபக்தியுள்ள வணக்கத்துடனே சாஷ்டாங்கமாக விழுந்து நீர் எங்கள் பேரில் இரக்கமாயிருக்கப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம். எங்கள் பாவங்களையும் நன்றிக்கெட்டத்தனத்தையும் நினைத்து மிகவும் மனஸ்தாபப்படுகிறோம். அவைகளை அருவருத்து என்றென்றைக்கும் விலக்கிவிடவும், எங்களால் இயன்ற மட்டும் அவைகளுக்குப் பரிகாரம் செய்யவும் துணிகிறோம் சுவாமீ. அடியோர்கள் உமக்குச் செய்த தோஷ துரோகங்களுக்காகவும், புறவினத்தார், பதிதர், பொல்லாத கிறீஸ்துவர்கள் முதலானவர்கள் உமக்குச் செய்கிற நிந்தை அவமானங்களுக்காகவும், மிகுந்த துக்க மனஸ்தாபப்பட்டு அவைகளை தேவரீர் பொறுக்கவும், சகலரையும் நல்வழியில் திருப்பி இரட்சிக்கவும் வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். உம்முடைய திரு இருதயத்துக்குச் செய்யப்பட்ட சகல நிந்தை அவமான துரேர்கங்களுக்குப் பரிகாரமாக அற்பமாகிய எங்கள் ஆராதனை வணக்க தோத்திரங்களையுமல்லாமல் மோட்சத்தில் வாழுகிற சகல சம்மனசுக்கள், அர்ச்சியசிஷ்டவர் களின் ஆராதனைப் புகழ்ச்சிகளையும், பூலோகத்திலுள்ள சகல புண்ணியாத்துமாக்களின் ஸ்துதி நமஸ்காரங்களையும் மிகுந்த தாழ்ச்சி விநயத்துடனே தேவரீருக்குச் செலுத்துகிறோம். எங்கள் திவ்விய சேசுவே! எங்களுக்கு ஏக நம்பிக்கையே! அடியோர்கள் எங்களை முழுதும் இப்போதைக்கும் எப்போதைக்கும் உம்முடைய திரு இருதயத்துக்கு ஒப்புக்கொடுக்கிறோம் சுவாமீ. தேவரீர் எங்களிருதயத்தை உமது கைவசமாக்கிச் சுத்தப்படுத்தி அர்ச்சிய சிஷ்ட இருதயமாகச் செய்தருளும். நாங்கள் உயிரோடு இருக்கு மட்டும் எங்களைச் சகல சத்துருக்களுடைய சற்பனைகளிலிருந்து காத்துரட்சியும் சுவாமீ.

தேவரீர் சகல மனிதருக்காகவும் சிலுவைமரத்தில் சிந்தின திரு இரத்தத்தைப் பார்த்து இந்த மன்றாட்டுகளைத் தந்தருளும் சுவாமீ. ஆமென்.